தோனி ஒரு சிறந்த மனிதர், நிஜமான நாயகன். பிசிசிஐ தோனியை சரியான முறையில் நடத்தவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சாக்லின் முஸ்தாக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா தானும் தோனி வழியைப் பின்பற்றுவதாகக் கூறி ஓய்வை அறிவித்தார்.

தோனியின் இந்த திடீர் முடிவு கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தோனியின் சாதனைகள் குறித்தும், நினைவுகள் குறித்தும் பல நாடுகளைச் சார்ந்த கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சாக்லின் முஸ்தாக் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பொதுவாக என்னுடைய நிகழ்ச்சிகளில் நான் எதையும் எதிர்மறையாகச் பேசமாட்டேன். ஆனால் தற்போது என்னுடைய இதயம் இதைச் சொல்லவேண்டும் எனச் சொல்லுகிறது. தோனியை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு புகார் இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

தோனி ஒரு சிறந்த மனிதர், நிஜமான நாயகன். அவர் இந்திய அணியின் சீருடையைக் கடைசியாக உடுத்தி, கையுறை அணிந்து பேட்டை ஏந்தி, பின்பு கையுறையைக் கழற்றி, அவருடைய தொப்பியை கடைசியாக ஒரு முறை நீக்கியிருந்தால் அது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

பிசிசிஐ அவரை சரியாக நடத்தவில்லை என என்னைப்போல் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கிரிக்கெட் விரும்பிகளும் ஒப்புக்கொள்வார்கள் என என்னால் உறுதியாகக் கூற முடியும். ஒரு பெரிய வீரரை இப்படிச் சரியாக நடத்தாதது, பிசிசிஐ-யின் இழப்பு. அவர் இப்படி ஓய்வு பெற்றிருக்கக்கூடாது” என சாக்லின் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள சாக்லின் முஸ்தாக், கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: அர்ஜுனா விருது பெற இன்னும் என்ன தகுதி வேண்டும்.. மோடிக்கு மல்யுத்த வீராங்கனை கேள்வி