அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் கே.பி. செல்வா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தெறி, மெர்சல் வெற்றியை அடுத்து விஜய் – அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி 63 படம் தன்னுடையது என குறும்பட இயக்குனர் கே.பி.செல்வா கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இதை ட்ரீம் வாரியர் பிக்ஸர் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோ நிறுவனத்திடம் கூறியிருந்தேன்.

நயன்தாரா, கங்கணா ரணாவத் போன்ற பெரிய நடிகைகளை வைத்து படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த கதையை அட்லி விஜய்யை வைத்து எடுப்பதாக தெரிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டேன். ஆனால் அவர்கள் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிடுங்கள் என அனுப்பி விட்டனர். இதையடுத்து திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டதற்கு சங்கத்தில் 6 மாதத்திற்கு மேல் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கதை திருட்டு என புகார் தெரிவிக்க முடியாது என தெரிவித்து கடிதத்தை திருப்பி அனுப்பிவிட்டனர்.

எழுத்தாளர் சங்கத்தில் புகாரை ஏற்க மறுத்த பிறகு நான் மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளேன். கதை திருட்டு குறித்த வழக்கு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது என்றார் செல்வா.

இந்நிலையில் பட கதை குறித்து அட்லியின் மேனேஜர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் எக்ஸிகுடிவ் தயாரிப்பாளர் என்னிடம் பேசினார்கள். இந்த கதை விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என கூறினர். இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த கதையின் கரு, என்னுடைய நெருங்கிய நண்பரின் மூலம் அட்லிக்கு கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.