தகவல் தொடா்புக்கான அதிநவீன சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெடின் கவுன்ட்-டவுன் தொடங்கியது.

தகவல் தொடா்புக்கான அதிநவீன சிஎம்எஸ்-01 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை (டிசம்பர் 17) மாலை 3.41 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படுகிறது.

எரிபொருள் நிரப்புதல் உட்பட ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்டப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. 25 மணி நேரம் கவுன்ட்-டவுன் இன்று (டிசம்பர் 16) பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் சுமார் 1,400 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் உள்ள விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் அலைக்கற்றைகள் இந்திய நிலப்பரப்பு பகுதிகளுடன், அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் வரை தற்போது உள்ள தொலைதொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்க உதவும்.

அதனுடன் தொலை மருத்துவம், இணையவழிக் கல்வி, பேரிடர் கண்காணிப்பு மற்றும் செல்போன் சேவைக்கு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் இதுவரை 41 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில் 2011-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக் கோள்ஆயுட்காலம் தற்போது முடிந்துவிட்டது.

அதற்கு மாற்றாக அதிநவீன சிஎம்எஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலதுசாரி அமைப்புகளுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்- வால் ஸ்ட்ரீட் பகீர் குற்றச்சாட்டு