சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பிற்கு முதல் பருவ தேர்வில் குஜராத் கலவரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது பாஜகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிபிஎஸ்இ அமைப்பு இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.

“குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்யும் போது நடைபெற்றது?” என்ற கேள்வி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முதல் பருவ சோஷியாலஜி பாட தேர்வில் இடம்பெற்றுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலாக 4 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதில், பாஜக, காங்கிரஸ், ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என கொடுக்கப்பட்டு, அதில் ஒன்றை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வில் சர்ச்சைக்குரிய இந்த கேள்வி கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த கேள்வி என்சிஇஆர்டி 12 ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகமான ‘Indian Society’ பாடப்பிரிவில், ‘The Challenges of Cultural Diversity’ என்ற அத்தியாயத்தில் உள்ள ஒரு பத்தியிலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதில், இரண்டு பெரும் அதிர்ச்சிகரமான சமகால வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் முக்கிய அரசியல் கட்சிகளின் ஆட்சியின் கீழ் நிகழ்ந்தன. 1984இல் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் ஆட்சியிலும், 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பாஜக ஆட்சியிலும் நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ, “பிளஸ் 2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி முறையற்றது. கேள்வித்தாள் அமைப்பதற்காக வந்த ஆசிரியர்கள், சிபிஎஸ்இ விதிமுறைகளை மீறியுள்ளனர். தவறு நடந்துள்ளதை சிபிஎஸ்இ ஒப்பு கொள்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளது.

மேலும், பொதுத்தேர்வு வினாக்கள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். மதம் மற்றும் வகுப்புவாத நடுநிலைத்தன்மையுடன் கேள்விகள் அமைய வேண்டும். சமூகம் மற்றும் அரசியல் விருப்பங்களுக்கேற்ப பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வினாக்கள் அமையக்கூடாது என்பதை வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.