தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்து, வேதாந்தா குழுமத்தின் மனுவையும் டிஸ்மிஸ் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை காரணமாக அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் புற்றுநோய், குழந்தையின்மை, தோல் நோய் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். பலர் ஏற்கனவே இறந்த நிலையில்,அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் மாசுபட்டு, மக்கள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2018 மே 22-ஆம் தேதி மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து மே 28ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி முதல் சிறப்பு அமர்வில் நடைபெற்று வந்தது. 39 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர், கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 18) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், டிஎஸ் சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு வழங்கிய தீர்ப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்துள்ளதுடன், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: சிபிஐ பதில் மனுவில் திருப்தியில்லை- மதுரை ஹைகோர்ட்