தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி போராட்ட்த்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம், “மே 22 ஒரு சம்பவம்” என்ற பெயரில் திரைப்படமாக்கப்படவுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மே-22ம் தேதி 100வது நாள் போராட்டத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றார்.

இதில் கலவரம் ஏற்பட்டதாக கூறி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவாகரம் தொடர்பாக தமிழக அரசு ஆணையம் அமைத்து விசாரித்து வரும் நிலையில், 8 மாதங்களுக்கு மேலாஅகியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில்,தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர். இயக்குனர் சந்தோஷ் கோபால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் திரைப்படமாக உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ‘மே 22 ஒரு சம்பவம்’ என்ற பெயரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் படமாக்கப்படவுள்ளது. இதற்காக முதல் பார்வை போஸ்டர் ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் திரைப்படம் தொடர்பாக சந்தோஷ் கோபால் கூறும்போது, அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். முன்னதாக, ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை சம்பவங்களும் சந்தோஷ் கோபால் இயக்கத்தில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.