அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஜெயலலிதாவின் புகைப்படைத்தையும், அதிமுக கொடியின் நிறத்தையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
 
இதுதொடர்பாக அதிமுக மூத்த தலைவரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனுடன் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், டிடிவி.தினகரன் அமமுகவை கட்சியாக பதிவு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் அவர் மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படம் மற்றும், அதிமுகவின் கட்சி கொடியின் நிறத்தையும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
 
இது சட்டத்திற்கு எதிரானது. எனவே, ஜெயலலிதா படத்தையும், அதிமுக கொடியின் நிறத்தையும் டிடிவி.தினகரன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
புகாரளித்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க. தான் உண்மையான அ.தி.மு.க. என நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது.
 
இரட்டை இலைக்காகவும், அ.தி.மு.க.வுக்காகவும் சொந்தம் கொண்டாட மாட்டேன் எனத் தினகரன் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்.
 
உச்சநீதிமன்றத்தில் கொடுத்த இந்த உறுதிமொழிக்கு மாறாக, எங்கள் கட்சி கொடியின் மாதிரியையும், தங்கள் கொடிக்கு நடுவே எங்கள் கட்சித் தலைவியான ஜெயலலிதாவின் படத்தையும் போட்டுக் கொள்கிறார்கள். அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க. கரை வேட்டியைப் பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று எங்கள் ஆட்சேபத்தைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம்.மேலும் தேர்தல் ஆணையம் தங்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.
 
எம்ஜியார் அதிமுக தொடங்கிய போது அவர் அண்ணாவின் படத்தை கொடியில் போட்டு கொள்ள திமுக தடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது ..