தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கும் ஒரு பிரிவினர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டதால் தற்போது சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுள்ளது. இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். அதில் இருந்தே அவருக்கும் ஒரு பிரிவு தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. சில வாரங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டுபோடும் அளவுக்கு மோதல் முற்றியது.

சங்கத்தின் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகும் விஷால் தலைவராக தொடர்கிறார். வைப்பு நிதியாக இருந்த ரூ.7 கோடி பணத்தை முறைகேடு செய்துள்ளார் என்றும் விஷால் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, விஷாலுக்கு எதிரான அதிருப்தி தயாரிப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. வணிக வரித்துறை மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்பட நிர்வாகிகள் யாரும் இனிமேல் சங்கத்தின் பணிகளில் தலையிட முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சேகர்தான் முடிவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய கோரி நடிகர் விஷால் சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சங்கத்தில் பிளவு ஏற்படுத்தவே தமிழக அரசு தனி அதிகாரியாக என் சேகரை நியமித்துள்ளது. எனவே, அவரது நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது