தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களுக்கான சொத்து வரிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு 2.4.2022 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு,

2021-2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25% மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50% மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75% மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100% சொத்துவரி உயர்வு செய்யப்பட உள்ளது. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23 ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, சென்னையின் பிரதான நகர பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50%, சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25% உயர்த்திடவும்,

மேலும், சென்னையின் பிரதான நகர பகுதிகளில் உள்ள 600-1,200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75%, 1,201-1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100%, 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 150% உயர்த்தவும்,

சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1.200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50%, 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 100% உயர்த்தப்படுகிறது.

சென்னையின் பிரதான நகர பகுதிகளில் வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 150%, தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 100%, சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100%, தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75%, சொத்து வரியினை உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் 62.40 சதவீதமும் ஆகவும்,

பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் பிற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 சதவீதமும் அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பாதல் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.

தற்போது, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சியான அதிமுக, தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 5 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள், இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10% வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.