தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் பெயரில் இயங்கி வரும் போலி இணையத்தளங்களை முடக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரபலமான பெரும்பாலான கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களின் பெயர்களில் போலி இணையதளங்களை தொடங்கிய பக்தர்களிடம், காணிக்கை, மற்றும் நன்கொடை வசூல் செய்வதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பல முக்கிய கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயில்களுக்கு வெளிநாட்டில் இருந்து பலர் தற்போது அதிகளவில் வந்து செல்கின்றனர்.

கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி அதற்கான ரசீதுகளை பெற்று செல்கின்றனர். வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோவில் இணையதளத்தில் உள்ள கணக்குகளில் பணத்தை செலுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் முக்கியமாக உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோயில், பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில் போன்ற பிரபலமான கோயில்களிலும், அறுபதாம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட திருமணங்கள் சிறப்பாக நடைபெறும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலிலும் சில தனியார் இணையதள முகவரி வைத்து கோயிலுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களில் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், இணையதளம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் பெயரில் இணையதளங்களை கோயிலுக்கு சம்பந்தமில்லாத சிலர் வைத்துள்ளதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் கோயில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான, போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த போலி இணையதளங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் குறித்து சைபர் கிரைம் காவல்துறை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து, இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இது போன்ற போலி இணைதளங்கள் குறித்து புகார் அளிக்க தனி அலுவலரையும், அதற்கான தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும்

மேலும் கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். திருப்பதி, மற்றும் சபரிமலை கோவில்கள் போன்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.