தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சிட்கோ தொழில் மனைகளின் விலையைக் குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.6.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இவ்வரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்,

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீளவும் வழிவகை செய்யும் பொருட்டு தற்போது, தொழில்மனைகளின் விலையை குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 50 ஆண்டுகள் கடந்து தனது சேவையினை வழங்கி வரும் தமிழ்நாடு சிட்கோ வரலாற்றில் முதல் முறையாக, தொழில்மனைகளின் அதிக விலை காரணமாக பல வருடங்களாக ஒதுக்கீடு செய்யப்படாமல் காலி மனைகளை கொண்ட தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பினை மிகக்கணிசமாக குறைத்துள்ளது.

தொழில் மனைகளின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தொழிற்பேட்டைகளில் மனைமதிப்பு தொழில்முனைவோர் எளிதில் வாங்கிடும் அளவில் குறைந்துள்ளது.

உதாரணமாக, ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 1,19,79,000/-லிருந்து 75% குறைத்து ரூ. 30,81,200/-, கும்பகோணத்தில் ரூ. 3,04,92,000/-லிருந்து 73% குறைத்து ரூ. 81,89,300/- மற்றும் நாகப்பட்டினத்தில் ரூ. 2,39,71,500/-லிருந்து சுமார் 65% குறைத்து ரூ. 85,35,800/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய மனைமதிப்பிலிருந்து ஏக்கர் ஒன்றிற்கு கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சியில் ரூ. 9 கோடியிலிருந்து 4.8 கோடி குறைத்து ரூ. 4.2 கோடியாகவும், திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில் ரூ. 4.8 கோடியிலிருந்து ரூ. 2.8 கோடி குறைத்து ரூ. 2 கோடியாகவும்,

செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூரில் ரூ. 6 கோடியிலிருந்து ரூ. 2.5 கோடி குறைத்து ரூ. 3.5 கோடியாகவும் மற்றும் ஈரோடு தொழிற்பேட்டையில் ரூ. 6.4 கோடியிலிருந்து ரூ. 2.6 கோடி குறைத்து ரூ. 3.8 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைமதிப்பினால் பல வருடங்களாக குறைவான மனைகளே ஒதுக்கீடு செய்யப்பட்டு 400-க்கும் மேற்பட்ட காலி தொழில்மனைகளை கொண்ட காரைக்குடி, பிடாநேரி, இராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 30% முதல் 54% வரையிலும் மற்றும்

விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 40% முதல் 50% வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் 19 தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பும் சுமார் 5% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், 12 தொழிற்பேட்டைகளுக்கு 2016-2017-ஆம் ஆண்டில் இருந்த மனைமதிப்பே நடப்பாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பத்தூர் மற்றும் திருமழிசை தொழிற்பேட்டைகளுக்கு நடப்பிலுள்ள நடைமுறைகளின்படி ஏக்கர் ஒன்றிற்கு முறையே ரூ. 43,86,16,300/-, ரூ. 13,41,09,300/- என நிர்ணயம் செய்யப்பட வேண்டியதற்கு மாறாக 2016-2017-ஆம் ஆண்டின் ரூ. 25,07,79,100/-, ரூ. 7,66,77,400/- என்ற மனைமதிப்பே 2020-2021 ஆம் ஆண்டிற்கான மனைமதிப்பாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் குறைவான விலையில் மனை ஒதுக்கீடு பெற்று தொழில் துவங்க முடியும் என்பதால் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தொழில் மனைகள் ஒதுக்கீடு பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.