தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. தமிழ் மக்களின் உணர்வு மிகவும் ஆழமானது, அந்த உணர்வை சீண்டி பார்த்தால் தக்க பதிலடிகொடுப்பார்கள் என எம்.பி கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நம்ம ஊரு திருவிழா கலைக் குழுவினருக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பொங்கல் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கனிமொழி, “பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாடு என்ற பெயரை அண்ணா வைத்தார்.

தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. தமிழ் மக்களின் உணர்வு மிகவும் ஆழமானது. அது மற்ற உணர்வுகளை போல் பூசிக்கொண்டு தமிழ் மக்கள் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் அந்த உணர்வை சீண்டி பார்த்தால் தக்க பதிலடிகொடுப்பார்கள்.

சில மாநிலங்களில் ஆளுநர்களை முதல்வர்கள் வம்புக்கு இழுப்பது வாடிக்கையாகிவிட்டது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆளுநர்களை அவர்கள் வம்புக்கு இழுக்கவில்லை.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் தான் ஆளும் கட்சியை வம்புக்கு இழுக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு என்ற பெயர் உறுத்தலாகவே உள்ளது. எப்பொழுதும் அமைதியாக பேசும் முதல்வர் மிகக் கறாராகப் பதில் சொல்லக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.