தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில், தெலுங்கானாவை சேர்ந்த 34 பேர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிற மாநில தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழக அரசின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் முதல் 18 மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதனிடையே பிறமாநில மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்று இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக 34 மாணவர்களின் பெயர்கள் தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு தரவரிசை பட்டியலில் இடம்பெற்று முறைகேடு நடந்துள்ளது சர்ச்சையாகியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் இதுகுறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களின் இருப்பிட சான்றிதழை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு மற்றும் கேரள மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 2 மாநில தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “ஒரு மாணவர் இரண்டு மாநிலங்களில் விண்ணப்பிப்பதில் தவறில்லை. இரண்டு மாநிலங்களிலும் அந்தந்த மாநில இருப்பிடச் சான்றிதழ் வழங்கினால் தான் தவறு” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக நீதியை, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாடுபடும் பாஜக அரசு- தலைவர்கள் கண்டனம்