முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 10 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் இரண்டு இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்படுகிறார். மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழக போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்படுகிறார். தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றம் செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்று 10 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதன்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, “தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார் என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறியிருந்தார். இந்த சர்ச்சையின் எதிரொலியாகவே, அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறும்போது, “நேற்று முன்தினம் சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இல்லத்துக்கு, நானும் எனது நண்பருமான பிடிஓ அன்புக்கண்ணனும் சென்றோம். அங்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் எனது சமூகத்தை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்.

உடனடியாக என் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனே என்னை டிரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அமைச்சரின் உதவியாளர் கண்ணனிடம் கூறினார். மேலும், கடுமையாக என்னையும், அன்புக்கண்ணனையும் பேசி “வெளியே போங்கய்யா” என்று கேவலமாக பேசி அவமதித்தார். இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகியோரைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளேன்” என்று அவர் கூறியிருந்தார்.