தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை (5-ந் தேதி) குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக உள்ளது. அது உருவாகிய 48 மணிநேரத்தில் அதாவது 6 மற்றும் 7-ந் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அது புயலாக வலுவடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதன் காரணமாக மீனவர்கள் குமரி கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதியில் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீனவர்கள் 5-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

லட்ச தீவுப்பகுதியில் வழிமண்டலத்தில் சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியில் வழிமண்டலத்தில் சுழற்சி உள்ளது. இந்த இரு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும்.

மேலும் தமிழகத்தில் 14 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீட்டிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, வேலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று அறிவித்துளளது.

மேலும் கனமழை எச்சரிக்கை உள்ள நிலையில் மீட்புப் பணிக்குத் தயார் நிலையில் உள்ளதாக தேசியப் பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளனர்.எவ்வளவு குழுக்கள், வீரர்கள் தேவைப்பட்டாலும் அனுப்பத் தயார் என தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது. மாநில, மாவட்ட நிர்வாகங்களுடன் அவ்வப்போது நிலவரங்களை கேட்டறிந்து வருகிறோம். பேரிடர் காலங்களில் தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் நிலையில் உள்ளதாக தேசியப் பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப, அதிக வீரர்கள் தேவைப்பட்டாலும், வெளி மாநிலங்களில் இருந்து வீரர்களை அனுப்பத் தயார் நிலையில் உள்ளது. மேலும் மீட்புப்படை வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மணமேல்குடி, தக்கலை தலா 7 செ.மீ., குடவாசல், திருவாரூர், குழித்துறை தலா 5 செ.மீ., திருமானூர், நாகர்கோவில், விளாத்திக்குளம், கோவில்பட்டி தலா 4 செ.மீ., பாடலூர், ராதாபுரம், திருவையாறு, பட்டுக்கோட்டை, கொடைக்கானல், கழுகுமலை, நத்தம், திண்டுக்கல், ஆர்.எஸ்.மங்கலம், கரம்பக்குடி, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், அறந்தாங்கி தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இது தவிர மேலும் 45 இடங்களில் மழை பெய்துள்ளது.