தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பொதுமக்களின் கருத்து கேட்க 14417 என்ற உதவி எண்ணை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

ஒன்றிய அரசு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளதால், மாநிலங்களும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமா என்ற கேள்வி மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,

“மாணவர்களின் உடல் நலன், பாதுகாப்பு முக்கியம். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உடன் ஆலோசித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்க 14417 என்ற உதவி எண் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், tnschoolsedu21@gmail.com என்கிற இமெயில் முகவரிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற மேல்நிலைப் பள்ளிகளின் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள்.

அப்படியானால், அந்தத் தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? அவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா? எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும்.

காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேல்நிலைப்பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது, தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள்.

எனவே, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே மேல்நிலைப்பள்ளித் தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பது தான் அவர்கள் திட்டம். ஆனால், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது.

அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெற வேண்டும்; நீட் தேர்வு கூடாது என்பது தான், தமிழ்நாட்டின் கருத்து ஆகும்.

எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்; கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேல்நிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- பிரதமர் மோடி