தமிழகத்தில் கடந்த ஆறு வாரமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி வெயில் என்ற அளவில் தொடங்கி அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்குள் வெயிலின் கொடூர தாக்குதல் தொடங்கிவிட்டது.
 
இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருவதால் தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.
 
தற்போது வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருகிறது. நாளை இந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் , அதன் காரணமாக தென் மாவட்டங்களில் மேலும் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் எனவும் .,
 
இதனால்  29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் .,
 
அப்படி புயலாக மாறும் பட்சத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
 
இதன் முன்னோட்டமாக நேற்று இரவு முதல் வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
 
இதனால் சில இடங்களில் கடல் சீற்றம் காணப்படுகிறது. வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்தம் நிலை கொண்டு இருப்பதால் அது வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
புயலாக மாறும் போது சென்னை-நாகப்பட்டினம் இடையே கரை கடக்கக் கூடும் என்பதால் சென்னை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1, 2 ஏற்றப்பட்டுள்ளது.
 
இதன்காரணமாக தமிழகத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இது தவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 10 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
 
தஞ்சையில் நேற்றுகாலை முதல் வெயில் கொளுத்தியது. பிற்பகலில் மழை பெய்வதற்கான அறிகுறியுடன் திடீரென பலத்த காற்று வீசியது. ஆனாலும் தஞ்சையில் நேற்றும் மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றியது.
 
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாச்சியார்கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் 20க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தது.
 
போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். இந்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.
 
இந்த மழை பருத்தி செடிகளுக்கும், உளுந்து பயிர் உள்ளிட்ட அனைத்து வகையான பணப்பயிருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது
 
 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமாலை மழை பெய்தது.
 
திருச்சி மாவட்டம் துறையூர் , உப்பிலியபுரம் மற்றும் துறையூர் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது. மேலும் திருச்சி மாநகர பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்தது.
 
துறையூர் கடைவீதியில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பாதகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டது.
 
இதுபோல் உப்பிலியபுரம் பகுதியில் கொப்பம்பட்டி செல்லும் சாலையில் பலத்த சூறை காற்றுக்கு புளியமரம் வேரோடு சாலையின் நடுவே விழுந்து. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
உடனே சாலை பணியாளர்கள் புளியமரத்தை அகற்றினர். துறையூர் அருகே சிங்கலாந்தபுரத்தில் நேற்றுமாலை சூறைகாற்றில் வாழைத்தாருடன் 600 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.