சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்க மறுத்தது சர்ச்சையான நிலையில், ரிசர்வ் வங்கி சார்பில் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 73வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று (26.1.2022) கொண்டாடப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசால் மாநில பாடல் என அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் ஏன் எழுந்து நிற்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது” என ஆர்பிஐ அதிகாரிகள் வாதிட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறியும் ஆர்பிஐ ஊழியர்கள் அதனை மதிக்காமல் ஆணவமாக மறுத்துள்ளனர்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் தமிழ் தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையரிடம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் மூலம் அளித்துள்ள புகாரில், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதுடன், அரசு உத்தரவை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு திமுக எம்.பி கனிமொழி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ரிசர்வ் வங்கி சார்பில் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வருத்தம் தெரிவித்தார்.