தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது ஆளுநர் உர்ஜித் படேலின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்து பாஜகவை தாக்கியுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு அரசுடன் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் அதன் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா முடிவை எடுத்ததாக ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

உர்ஜித் படேல் ராஜினாமா நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நிரவ் மோடி விவகாரம், பொதுத் துறை வங்கிகளை முறைப்படுத்தும் விவகாரம் என பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா, சிபிஐ தலைமை அதிகாரிக்கு விடுப்பு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என தொடர்ந்து தன்னாட்சி அமைப்புகளுக்கு மத்திய பாஜக அரசு அச்சுறுத்தலாகி உள்ளது. மக்கள் இந்த நடவடிக்கைகளை பார்த்து எத்தனை காலம் தான் மௌனமாக இருப்பார்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். மேலும், கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக-வை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டார். தேசியளவிலான ஊடக கருத்தரங்களில் பேசிய பிரகாஷ் ராஜ், தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வருவதால் இந்தி பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தென்னிந்திய படங்களில் மட்டுமே தற்போது நடித்து வருவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.