தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு எப்படி செலவிட்டுள்ளது, இந்த நிதியிலிருந்து ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என்று ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உரிய தடுப்பூசிக் கொள்கையை ஒன்றிய அரசு வகுக்காமல் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்துவதை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், “மாறுபட்ட விலை நிர்ணயம் செய்ததன் மூலம் 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு ஒரே சீராக தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே தற்போதைய தடுப்பூசி கொள்கை குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

டிசம்பர் 31 வரையில் வழங்கப்படவுள்ள தடுப்பூசி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநிலங்கள் தடுப்பூசி பெறுவதில் பல்வேறு சிக்கல் உள்ளன. எனவே மாநில அரசுகள் நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி வாங்க முடியுமா என்பது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்.

மேலும் கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பு, அவர்களுக்கான தடுப்பூசி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தனியார் மருத்துவமனை மூலம் வழங்கப்படும் தடுப்பூசியை கண்காணிக்க ஒன்றிய அரசு திட்டம் ஏதேனும் வகுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு எப்படி செலவிட்டுள்ளது என்றும்,

இந்த நிதியிலிருந்து ஏன் 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என்றும், மேலும், தடுப்பூசி ஆய்வுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலையை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும் ஒன்றிய அரசு 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசு தான் மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்க வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி