மத்திய அரசுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு மேற்கு வங்க அரசு அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
 
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு சமீபத்தில் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
 
இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற அரசு அதிகாரிகள் கூட்டத்தில், மம்தா பானர்ஜி பங்கேற்று உரையாற்றினார்.
 
அப்போது, மேற்கு வங்க மாநில அரசுத்துறைகள் தங்களுக்கென தகவல் தொகுப்புகளை பராமரித்து வருவதாக மம்தா பானர்ஜி பெருமையுடன் குறிப்பிட்டார்.
 
இந்த தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அரசுத்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு வழங்க கூடாது என்று மம்தா பானர்ஜி கண்டிப்புடன் கூறினார்.
 
மத்திய அரசிடமிருந்தும் எந்த புள்ளிவிவரங்களைப் பெற வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்த முயல்வதாகவும், மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி வருவதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.
 
மாநில அரசுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் போர்டலில் அனைத்து தகவல்களையும் சேகரித்து கொள்ளலாம் என்றும் தகவல் சேகரிப்பு காரணத்தை காட்டி மத்திய அரசிற்கு முக்கிய தகவல்களை அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகளுக்கு அறுவுரை வழங்கினார்.
 
மேற்குவங்கத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் தகவல்களை பயன்படுத்திக் கொள்ளும் மத்திய அரசு, அவர்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
 
அத்துடன் கூட்டாட்சி அமைப்பில் மத்திய அரசு நேரடியாக தலையிடுவதாகவும், இது சரியான நடைமுறையில்லை என்றும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசை போல மாநில அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.