டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் 34 வயதான பவினாபென் பட்டேல் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் 5வது நாளான நேற்று (ஆகஸ்ட் 28) நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி கலக்கலாக ஆடிய பவினாபென் பட்டேல் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவினாபென் பட்டேல், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை சந்தித்தார். பரபரப்பாக அரங்கேறிய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

இந்நிலையில், பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் பட்டேலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா பெயரில் விளையாட்டு மைதானம்!