வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கி விடுவதாக கூறி, இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியிலும், மாநில எல்லைகளிலும் கடும் குளிர், பனியையும் பொருட்படுத்தாது, லட்சக்கணக்கான விவசாயிகள் 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என அவர்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிடக் கோரி சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில், போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து முடக்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக புராரியில் உள்ள நிராங்கரி மைதானத்தை போலீஸார் கடந்த மாதம் 27 ஆம் தேதி போராட்டம் நடத்த ஒதுக்கினர்.

ஆனால், தற்போது விவசாயிகள் டெல்லி சாலைகளில் நடத்திவரும் போராட்டத்தால், எல்லைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கி, கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில் பல்வேறு சிரமங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடக்காமல், லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றாக சாலைகளில் முகக்கவசம் இன்றி, சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கூடியுள்ளார்கள். இதனால் கொரோனா வைரஸ் பரவலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆதலால், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தி டெல்லி போலீஸார் ஏற்கெனவே ஒதுக்கிய இடத்தில் போராட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஷாகின்பாக் பகுதியில் நடத்தும் போராட்டம் குறித்த வழக்கில் கடந்த மாதம் அக்டோபர் 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்தக் கூடாது. போராட்டம், எதிர்ப்புகளை அதற்காக ஒதுக்கப்பட்ட தனி இடத்தில் தெரிவிக்கலாம் என நீதிமன்றம் கூறியதும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மனுமீதான விசாரணை வரும் 16 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.

நான் முதலில் விவசாயி மகன்; விவசாயிகளுக்காக பதவியை துறந்த பஞ்சாப் டிஐஜி