டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. இதன்மூலம் இந்தியா இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (31.10.2021) துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.

இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி எளிதில் இலக்கை எட்டியது.

துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டேரில் மிட்செல்-கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிரடியாக ஆடிய மிட்செல் 49 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் 31 பந்துகளில் 33 ரன்கள் (நாட் அவுட்), கான்வே 2 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, நியூசிலாந்து அணி 33 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.