ஜார்ஜ் பிளாய்டின் 6 வயது மகளான ஜியானாவின் பெயரில் டிஸ்னி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிப் பரிசளித்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபலப் பாடகியான பார்பரா ஸ்ட்ரைசாண்ட்.

அமெரிக்காவில் போலீஸாரால் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மரணம், சர்வதேச அளவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை துவக்கி உள்ளது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் கறுப்பின மக்களை அடிமையாக நடத்திய பலரின் சிலைகள் போராட்டக்காரர்களால் இடிக்கப்பட்டுள்ளன. இனவெறிக்கு மேலும் பல ஜார்ஜ் பிளாய்டுகள் பலியாகிவிடக் கூடாது என்பதற்கான முன்னெடுப்பே இப்போராட்டங்கள்.

ஆனால், பிளாய்டை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு என்ன பதில்.. அவரது ஐந்து குழந்தைகள் வருங்காலத்தை எப்படி எதிர்கொள்வார்கள்.. இந்தக் கேள்விகளுக்கு மனிதமே பதில் என்று நிரூபித்திருக்கிறார்கள் இனவெறிக்கு எதிரான பிரபலங்களும், சாமானியர்களும்.

ஜார்ஜ் பிளாய்டின் குழந்தைகளுக்குச் சர்வதேச அளவில் உதவிக் கரம் நீண்டுள்ளது. அவரது மகள் மற்றும் பேரப் பிள்ளைகளின் படிப்புக்கு முழு உதவித்தொகை அளிக்க ‘ஆல்பா கப்பா ஆல்பா’ (Alpha Kappa Alpha) என்ற அமைப்பு முன்வந்துள்ளது.

இந்நிலையில், பிளாய்டின் 6 வயது மகளான ஜியானாவின் பெயரில் டிஸ்னி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிப் பரிசளித்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபலப் பாடகியான பார்பரா ஸ்ட்ரைசாண்ட். அத்துடன், தான் சிறுவயதில் நடித்த ‘மை நேம் இஸ் பார்பரா’ மற்றும் ‘கலர் மி பார்பரா’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் காணொலிப் பதிப்புகளையும் ஜியானாவுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்னி நிறுவனப் பங்குக்கான சான்றிதழுடன் பார்பராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜியானா. இன்றைய தேதியில் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 118.44 அமெரிக்க டாலர்கள். 2010-ம் ஆண்டு வாங்கப்பட்ட டிஸ்னி நிறுவனத்தின் பங்கின் மதிப்பு தற்போது 370 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஜியானா வளர்ந்து தன்னுடைய வாழ்க்கையை எதிர்கொள்ள தொலைநோக்குப் பார்வையுடன் செயலாற்றியுள்ள பார்பராவுக்கு உலகம் முழுக்கப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

மேலும் வாசிக்க: நான் தோல்வி அடைந்தால் நாட்டிற்கு மிகவும் கெடுதல்- அதிபர் டிரம்ப்