இந்தியா முழுவதும் 412 தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையங்களையும் மூடுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதுடன் அதற்கான உத்தரவையும் பிறப்பித்து உள்ளது. இதனால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் சல்லிமலையில் 1,060 அடி உயர உயர் சக்தி ஒளிபரப்பு கோபுரம் அமைந்துள்ளது. இது சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரம், ஆசியாவிலும் உயரமான ஒளிபரப்பு கோபுரம் ஆகும்.

இந்த தொலைக்காட்சி நிலையம் ரூ.5½ கோடி நிதியில் 1993 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இங்கிருந்து 1995 ஆம் ஆண்டு முதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் சேவைகள் ஒளி, ஒலிபரப்பு ஆகின்றன.

சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தூர்தர்ஷன் நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பெற்று ராமேசுவரத்தில் உள்ள தொலைக்காட்சி நிலையம் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள கடற்கரை மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் ராமேசுவரம் தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்பு சேவை கிடைத்து வந்தது.

நாட்டிலேயே அதிக பரப்பளவுக்கு ஒளிபரப்பாகும் நிலையங்களில் ஒன்றாக மட்டும் இல்லாமல் இலங்கைக்கும் இங்கிருந்து ஒளிபரப்பு சேவை கிடைத்தது. இந்த தொலைக்காட்சி நிலைய ஒளிபரப்பு சேவையானது இலங்கை யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் வரை கிடைத்தது.

ராமேஸ்வரம் தீவு மீனவர்களுக்கு இந்த கோபுரத்தின் உச்சியில் விளக்கு வெளிச்சம் கலங்கரை விளக்கம் போன்றது. இதன் ஒளி இலங்கையில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கடல் பகுதியில் கூடத் தெரியும்.

தற்போது வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியால் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பது குறைந்துவிட்டது. டிடிஎச், கேபிள் டிவி, இணையம் வழியாக நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்களை மக்கள் கண்டுகளிக்கின்றனர்.

தரைவழி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தூர்தர்ஷன் மட்டுமே கிடைத்து வருவதால் மக்கள் இச்சேவையை பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ் மீட்டர் தொழில்நுட்பத்தை, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு (டிடிஎச்) மாற்ற பிரசார் பாரதி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் இந்தியாவில் உள்ள 412 தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையங்களையும் மூடுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதுடன் அதற்கான உத்தரவையும் பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில் 26 ஆண்டுகள் ராமேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தின் தரைவழி ஒளிபரப்பு முழுமையாக நிறுத்தப்படுவதாகவும், வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தூர்தர்சன் தொலைக்காட்சி நிலையம் நிரந்தரமாக மூடப்படுவதாகவும் ஒன்றிய அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 412 ஒளிபரப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம், அங்கு நேரடியாகப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெற்றுவந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.