நடிகரும் முன்னாள் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஜே.கே.ரித்தீஷ் (வயது 46) மாரடைப்பால் காலமானார். தேர்தல் பரப்புரை பணிக்காக ராமநாதபுரம் சென்றிருந்த போது மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சின்னபுள்ள படத்தின் மூலம் அறிமுகமான ஜே.ஜே.ரித்தீஷ், இலங்கை கண்டியில் பிறந்தவர். இவர், பல படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார்.

கடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் களம் கண்ட இவர், முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். தவிர, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் ஜே.கே.ரித்தீஷ் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இவர் இறுதியாக எல்.கே.ஜி படத்தில் நடித்துள்ளார்.

ஜே.கே.ரித்தீஷ் 2009ம் ஆண்டில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பின்னர் 2014 திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.

இவர், தேர்தல் பிரச்சார பணிக்காக ராமநாதபுரம் சென்றிருந்தார். அங்கு, ராமதநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் ஓய்வில் இருந்தார். அப்போது அவருடைய உடல் அசைவற்று இருந்த நிலையில், உடனே வீட்டில் இருந்த பணியாளர்கள் அவரை ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஜே.கே.ரித்தீஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய மரணம் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.கே.ரித்தீஷ் மறைவு குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும் போது, பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஜே.கே.ரித்தீஷ் உடன் இருந்த போதிலும் நடிகர் சங்க செயல்பாடுகளில் மிகவும் அக்கறை காட்டினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறினார்.

அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.