மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து வரி வழக்கில், அவருடைய வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் மகன் தீபக் இருவரையும் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008, 2009 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, சொத்து வரி சட்டம் 35வது பிரிவின் கீழ் வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து, வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவை சொத்து வரி வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனு நேற்று (டிசம்பர் 06) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால் அவருடைய வாரிசுகளான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அண்ணன் மகன் ஜெ. தீபக்கை ஆகியோரை வழக்கில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

முன்னதாக, போயஸ் கார்டனில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை, நினைவிடமாக்க நிலம் கையகப்படுத்தும் அதிமுக அரசின் நடைமுறைகளை ரத்து செய்து, ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுகள் ஜெ. தீபா, ஜெ. தீபக் என்று சென்னை உயர் நீதிமன்றம்
அறிவித்தது குறிப்பிடத்தக்கது.