அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ரூ.22 கோடியை, ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்காக அதிமுக அரசு மாற்றம் செய்துள்ளது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைய உள்ளது. பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதோடு, இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. பளிங்கு கற்களும் பதிக்கப்பட்டு வருகிறது.

இதனை பிரம்மாண்ட அளவில் கட்டுவதற்காக அதிமுக அரசு, மக்கள் வரி பணத்தில் சுமார் 50.80 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து நினைவிடம் கட்டுமான பணி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. ஓராண்டிற்குள் முடிக்கவேண்டிய பணி காலதாமதமானதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட கூடுதல் நிதி தேவைப்பட்டதால் மீண்டும் சுமார் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிதி அரசு தனியாக ஒதுக்கீடு செய்யாமல் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுமான பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 93 கோடியில் இருந்து மடைமாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஜெயலலிதா நினைவிடம் அமைத்தல் தொடர்பாக கடந்த 2019 அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற பொதுப்பணித்துறையின் 326வது ஒப்பந்த ஒதுக்கீட்டு குழு கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பின்படி ஏற்கனவே, ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையான ரூ.50 கோடியே 80 லட்சத்துடன் தற்போது கூடுதலாக தேவைப்படும் ரூ.7 கோடியே 116 லட்சத்து 14 ஆயிரத்து 524க்கு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

தற்போது ரூ.50.80 கோடியில் ரூ.35.13 கோடி செலவிடப்பட்டுள்ளது. செலவிடப்படாத மீதத் தொகை அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலையிலும் இக்கட்டுமானம் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டிய நிலையிலும்,

2020-21 வரவு செலவு திட்டத்தில் தாடண்டர் நகரில் அரசு ஊழியர் குடியிருப்பு அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.15 கோடியே 67 லட்சத்து 38 ஆயிரம் மறு ஒதுக்கீடு செய்யுமாறு முதன்மை தலைமை பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார். அவை அரசின் பரிசீலனைக்கு பின்னர் இக்கோரிக்கை ஏற்கப்படுகிறது.

அதன்பேரில், கூடுதலாக வழங்க வேண்டிய ரூ.7 கோடியே 16 லட்சத்து 14 ஆயிரத்து 524 உடன் ரூ.15 கோடியே 67 லட்சத்து 38 ஆயிரம் சேர்த்து மொத்த தொகையான ரூ.22 கோடியே 83 லட்சத்து 52 ஆயிரத்து 524 தாடண்டர் நகர் அரசு ஊழியர் கட்டுமான பணிக்கான ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாற்றம் செய்யப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார்… விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு