ஒரு நபருக்கு இரண்டு நினைவு இல்லம் எதற்கு எனக் கூறி, ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி கடந்த அதிமுக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை கடந்த அதிமுக அரசு பிறப்பித்தது. பின்னர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. மேலும் அதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 68 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

இதனிடையே, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தங்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி உள்ளது. ஆகவே, அதுதொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (24.11.2021) விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வாரிசுகள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என தீர்ப்பளித்து, 3 வாரங்களில் வாரிசு தாரர்களிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ 67.95 கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ரூ.36,87,23,462 வசூலிக்க வருமான வரித்துறை தனியாக தொடங்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, ஒரே நபருக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு, மெரினா கடற்கரையில் நினைவிடம் இருக்கும்போது, வேதா நிலையத்தையும் மக்கள் பணத்தில் ஏன் மற்றொரு நினைவிடமாக அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.