ஜூன் 1-ந் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பல தொழிலார்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். வேலை பார்த்த மாநிலங்களிலேயே, முகாம்களில் தங்கியிருந்தனர். ஆனாலும், தங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின.

சமூக விலகல் நடைமுறையைப் பின்பற்றி, தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1-ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஏசி பெட்டிகள் கொண்டவை.

மேலும் வாசிக்க: கொரோனா அதிகரிப்பு எதிரொலி- பயணிகள் ரயில் சேவையை மீண்டும் நிறுத்திய இந்தியன் ரயில்வே

இந்நிலையில் புலம்பெயர் தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வரும் ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஏ.சி இல்லாத இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் என்றும், வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் தொடங்கும் வரையில் தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலே பத்திரமாக இருக்குமாறு ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.