நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஜனவரி 31 ஆம் தேதி முதல் நடைபெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.

போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதால், சுகாதாரப் பணியாளர்கள் அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், போலியோ சொட்டு முகாம்களை நடத்துவதில் சிக்கல் எழுந்ததையடுத்து, போலியா சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஜனவரி 15) வெளியிட்டுள்ள அறிவிப்பில், போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வரும் 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைப்பார் என்றும், அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முகாம்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், முக்கிய பேருந்து, ரயில் நிலையங்கள், சமுதாய நலக்கூடம் உள்பட முக்கிய பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 5வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி எதிரொலி: போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்திவைப்பு