எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்து விவரங்கள், வருமானம் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாக எழுந்த புகாரில், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கலின்போது தன்னுடைய தேர்தல் பிராமண பத்திரத்தில் ரூ.1 கோடி அளவிற்கு சொத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை எடப்பாடி பழனிசாமி குறைத்து காட்டியதாக, தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் தனக்கு ரூ.3.16 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த பழனிசாமி, 2021 தேர்தலில் தனது சொத்து மதிப்பில் ரூ.1 கோடிக்கு மேல் குறைத்து காட்டியுள்ளார். எனவே சொத்து விவரங்களை மறைத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்தப் புகார் மீதான வழக்கு விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கை பொதுநல வழக்காக கருதி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சேலம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “புகார்தாரர் மிலானி, தனது தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல, வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல.

ஓராண்டு கால அவகாசத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு. மேலும் இந்த வழக்கு தேர்தல் தொடர்பானது என்றும், விசாரணைக்கு உகந்ததில்லை, இதனால் சேலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நீதிபதி விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், புகார் குறித்து விசாரணை நடத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 125 (ஏ) (1), 125 (ஏ) (2), 125 (ஏ) (3) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.