ஜெயலலிதா சொத்து, கடன் விவரங்களை ஏப்.25ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெ. சொத்து விவரத்தை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  பெயருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கோட நாடு எஸ்டேட் என்று சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்து உள்ளன. சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்த சொத்துக்களை  எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை புகழேந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த  காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தன.

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட சொத்து விவரம், 2016 தேர்தலின்போது வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து விவரம் ஆகியவை குறித்த அறிக்கையை தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 2ம் தேதி  தள்ளிவைத்தனர். 

ஜனவரி 2ம் தேதி நடந்த விசாரணையில், ஜெயலலிதாவின் மொத்த சொத்து விபரங்களை தெரிந்துகொள்ள முடியாத நிலை நீடிப்பதால் அவரது சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை, தமிழக அரசு மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு ஏப்.25 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தன்னை நிர்வாகியாக நியமிக்கக் கோரிய மனுவையும் வழக்குடன் சேர்த்து விசாரிக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.