சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதேபோல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டு மனைகளும், 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கும் அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமான சொத்து சேர்த்துள்ளது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும்,

விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை, இதனால் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும், அதனால் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும் கூறி, வழக்கை முடிக்கவும் பொதுத்துறை உத்தரவிட்டதாதாக கூறப்பட்டிருந்தது.

மேலும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆரம்பக்கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை. அரசு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது வருமானம் உள்ளது என கூறினார். இதனையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்தியநராயணன், ஆர். ஹேமலதா அமர்வு கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தீர்ப்பளித்த மாறுபட்ட தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்துக்குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்குப் பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிழைகள் கொண்ட மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தொடர்ந்து வாய்தா கேட்டு வருகின்றனர். அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.

இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால், இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 01 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கொடநாடு வழக்கு மறுவிசாரணை: பதற்றத்தில் போராட்டத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி!