சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த அனுராக் சோனி என்ற ஒரு டாக்டருக்கும், அவருடன் வேலை செய்துவந்த நர்ஸுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
 
இருவரும், காதலர்களாக வெளியில் திரிந்த நிலையில், ஒரு கட்டத்தில், இருவரும் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர்.
 
உடலுறவுக்கு முன்னதாக, ‘கண்டிப்பாக உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று டாக்டர், நர்ஸிடம் சத்தியம் செய்து, உடலுறவுக்கு சம்மதிக்க வைத்துள்ளார்.
 
தொடர்ந்து, சில வாரங்களுக்கு பிறகு, பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கும்வரை காத்திருக்கக் கூறினார் அனுராக். அதன்படி, அந்த பெண்ணும் காத்திருக்கவே, இப்படியாக பலமுறை இழுத்தடித்து வந்துள்ளார் அனுராக்.
 
இறுதியாக, அனுராக், நர்ஸிடம் உள்ள தொடர்பையே துண்டித்து விட்டார். திருமணம் குறித்து எந்த ஒரு பதிலும் அனுராக்கிடம் இருந்து வரவில்லை என்றதும் அந்த பெண்ணிற்கு வாழ்க்கையையே வெறுத்துவிட்டது.
 
அதே நேரத்தில் டாக்டர் அனுராக்கிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்தனர் அவர்களது பெற்றோர். இதையறிந்த அந்த பெண், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், டாக்டருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, நேற்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.
 
இதில், ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி, “உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதும் பாலியல் வன்கொடுமை தான்” என்று கூறினர்.
 
எனவே குற்றவாளியின் தண்டனையை ரத்து செய்ய முடியாது, வேண்டுமென்றால், குற்றவாளியின் தண்டனையை 10 வருடத்தில் இருந்து 7 வருடமாக குறைக்கிறோம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
 
மேலும், நீதிபதி ஷா பேசுகையில், “தற்போதைய சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளன.
 
பாலியல் வன்கொடுமை என்பது ஒழுக்க ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி, பெரும் குற்றமாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் உடல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதும் பாதிக்கப்படுகிறது.
 
பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்ணின் ஆத்மாவை செயல்படவிடமால் தடுக்கிறது. அந்த சமயத்தில் பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், காம வெறியினால் ஒரு விலங்கினம் போன்று நடத்தப்படுகிறாள்.
 
அந்த பெண்ணின் மனதில் ஆறாத ஒரு வடுவை அந்த சம்பவம் ஏற்படுத்துகிறது. சமூகத்தில் குற்றச்செயலாக பார்க்கப்படும் பாலியல் வன்கொடுமை, பெண்ணின் உரிமைகளையும் பறிக்கிறது. இதன்மூலம், பெண்களின் மதிப்பு மற்றும் கண்ணியத்தின் மீது அவமதிப்பு ஏற்படுகிறது” என்று கூறியுள்ளனர்.