வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே உள்ளது.
 
வாட்ஸ் ஆப் நிறுவனம் சேகரிக்கும் தகவல்களுக்கு பல கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனிநபர் பயன்படுத்தும் செல்லிடப்பேசியில் ‘ஸ்கீரின் லாக்’ இல்லையென்றால் ஒருவரின் வாட்ஸ் ஆப் தகவல்களை மற்றொரு நபர் எளிதாகப் படித்துவிடலாம்.
 
காலத்துக்கு ஏற்ப பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும், நவீன சேவைகளையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.
 
இதன் அடுத்தகட்ட முயற்சியாக, பயன்பாட்டாளர்களின் செல்லிடப்பேசிக்கு உள்ளே ஒருவர் ஊடுருவினாலும் வாட்ஸ் ஆப்பிற்குள் நுழைய தனி பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ் ஆப் உருவாக்கியுள்ளது.
 
அதாவது, வாட்ஸ் ஆப்பிற்காக தனியாக ஒரு ‘லாக்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வாட்ஸ் ஆப்பிற்குள் நுழைவதற்கு முக அடையாளம், கை ரேகை பதிவு அவசியமாகிறது.
 
 
இந்த தகவலை வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் செல்லிடப்பேசியில் உள்ள ஒருவரின் அந்தரங்கத் தகவல்களை மற்றொருவர் எடுத்து படிப்பது தடுக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த புதிய சேவை ஐபோன் 5 எஸ் மாடல்களுக்குப் பிறகு வெளியான அனைத்து ஐபோன்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய சேவையைப் பயன்படுத்த வாட்ஸ் ஆப் செட்டிங்கிற்குள் சென்று “நவ் செலக்ட் அக்கவுண்ட்’ – ‘பிரைவஸி’ – ‘ஸ்கிரீன் லாக்’ – ‘ஃபேஸ் ஐடி’ அல்லது ‘டச் ஐடி’ ஆகியவற்றைக் கிளிக் செய்ய வேண்டும்.
 
வாட்ஸ் ஆப்பில் இருந்து வெளியான பிறகு எவ்வளவு நேரத்தில் இந்த லாக் செய்ய வேண்டும் என்பதையும் நாம் குறிப்பிட்டு பாதுகாப்பு சேவையைப் பயன்படுத்தலாம்.
 
இந்த புதிய சேவை விரைவில் ஆன்ட்ராய்ட் செல்லிடப் பேசிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.