கொரோனா வைரஸ் தொற்று ரூபாய் நோட்டுகள், செல்போன் திரைகள் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்றவற்றின் பரப்புகளில் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம் கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் அடிப்படையில் வெப்பம் அதிகரித்தால் கொரோனா வைரஸ் உயிர்வாழும் விகிதங்கள் குறைவது அதில் தெரியவந்துள்ளது

மேலும், 20 டிகிரி செல்சியஸில் மென்மையான மேற்பரப்புகளான மொபைல் போன் திரைகளைப் போன்ற கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள் உயிர்வாழும் எனக் கண்டறிந்துள்ளனர். மேலும் 30 டிகிரி செல்சியஸில் உயிர்வாழும் வீதம் ஏழு நாட்களாகக் குறைவதும், 40 டிகிரி செல்சியஸில் வெறும் 24 மணி நேரமாக உயிர்வாழும் வீதம் குறைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பருத்தி போன்ற நுண்ணிய மேற்பரப்பில் இந்த வைரஸ் குறுகிய காலத்திற்கே உயிர்வாழும் எனவும், குறைந்த வெப்பநிலையில் 14 நாட்கள் வரை மற்றும் அதிக வெப்பநிலையில் 16 மணி நேரத்திற்கும் குறைவாகவே உயிர்வாழும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸ் நுண்ணிய மேற்பரப்பில் 4 நாட்கள் வரை உயிர்வாழக்கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது கொரோனா வைரஸின் வாழ்நாள் கணிசமாக நீண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய நோய் எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ட்ரெவர் ட்ரூ கூறுகையில், “வைரஸின் மாதிரிகளை சோதனை செய்வதற்கு முன்பு வெவ்வேறு பொருட்களில் அதன் வாழ்நாளை கண்டறிந்தோம். மிகவும் உணர்திறன் முறையைப் பயன்படுத்தி உயிரணு கலாச்சாரங்களை பாதிக்கக்கூடிய நேரடி வைரஸின் தடயங்களைக் கண்டறிந்தோம். ஒரு நபர் இந்த பொருட்களை கவனக்குறைவாக தொட்ட பின்னர் அதே கையால் வாய், கண்கள் அல்லது மூக்கு போன்வற்றை தொட்டால், அவை மாசுபட்ட 2 வாரங்களுக்கு பின்னும் கொரோனா தொற்று பரவும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: உலக சுகாதார அமைப்பின் ‘கோவாக்ஸ்’ கூட்டணியில் சீனா இணைந்தது