“ஜூலை காற்றில்” படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கார்த்தியுடன் செல்பி எடுக்க முயன்ற நடிகை கஸ்தூரிக்கு அறிவுரை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கே.சி சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு சூரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜூலை காற்றில். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் கார்த்தியை மேடைக்கு பேச அழைத்த நடிகை கஸ்தூரி, ஒரு செல்பி எடுக்கனும் என்று கார்த்தியை அழைத்தார். மேலும் கார்த்தியின் அப்பா சிவகுமார் இல்லாததால் செல்பியை அவசரமக எடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து கார்த்தி பேசுகையில், “செல்பி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுப்பது என்றில்லாமல் முகத்துக்கு முன்னால் கேமராவை நிறுத்துகிறார்கள். பின்னால் ஒரு ஃபிளாஷ், முன்னால் ஒரு ஃபிளாஷ் என கண்ணில்பட்டால் என்ன ஆவான். ஒரு விவஸ்தையே கிடையாது.

போட்டோ எடுப்பதைக்கூட மரியாதையாகக் கேட்டு எடுக்கத் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது. இப்படிச் சொன்னால் தான் உண்டு. வேறு எங்கும் சொல்ல முடியாது’’ என்று கூறினார்.

சமூக வலைதளங்களில் இச்சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, “இந்த மாதிரி வைரலாகத்தான் நாங்க அப்படிப் பண்ணோம். இது வேண்டுமென்றே செய்த விஷயம். நாங்க நினைச்சமாதிரியே இது வைரல் ஆயிடுச்சு. இத நம்பி கொந்தளிக்குறவங்க படத்தை என்ஜாய் பண்ணுவீங்க’’ என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.