சென்னையை சுற்றியுள்ள பரனூர் உள்பட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும், வரும் 30 ஆம் தேதியோடு ஓஎம்ஆர் சாலையில் சுங்க வசூல் நிறுத்தப்படுவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 27 பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு திட்டங்களை அறிவித்து, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த வகையில் நெடுஞ்சாலைகள் துறையின் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சுங்கச்சாவடிகளை ஒவ்வொரு முறை கடக்கும்போதும் நீண்ட நேரம் ஆகிறது.

பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்பதை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளை அகற்றி பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுங்கசாவடிகளை கடப்பதற்கு அமைச்சராகிய எனக்கே பல நிமிடங்கள் ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

சென்னையைச் சுற்றி நீண்ட காலமாக நகர்ப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய பரனூர், வானகரம், சமுத்திரம், நெமிலி, சூரப்பட்டு ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.

கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதலமைச்சரின் உத்தரவின்படி டெல்லிக்கு நேரில் சென்று ஒன்றிய அமைச்சநிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதையொட்டி, இராஜீவ்காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதா- தமிழ்நாடு அரசு