சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று (14.2.2022) கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின், அவர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் முனீஸ்வர் நாத் பண்டாரியை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று (14.2.2022) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ஒன்றிய – மாநில அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, கடந்த 1960 ஆம் ஆண்டு செப்டம்பர்-13 ராஜஸ்தானில் பிறந்தவர். ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராகவும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர், 2019 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்துள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.