சென்னையில் இன்று (31.10.2021) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ106.04க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இந்தியாவில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு படுவேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த 170 நாட்களில் 70 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் 20 பைசா, 30 பைசா என பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

இருப்பினும் ஒன்றிய அரசின் வரிக் கொள்ளையால் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வை சிதைத்து வருகிறது. சென்னையில் நேற்று (30.10.2021) பெட்ரோல் லிட்டர் 105.74 ரூபாய், டீசல் லிட்டர் 101.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 106.04 ரூபாய்க்கும், டீசல் 33 காசுகள் அதிகரித்து 102.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் படிப்படியாக அதிகரிப்பது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையே பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி கூறுகையில், “‘ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவந்தால் அதன் விலை கட்டுப்படுத்தப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியும். பாஜக அல்லாத மற்ற மாநிலங்களும் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.