பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வெளியிட முன் வந்திருப்பதை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ். ஸ்ரீனிவாசன், கே. ராஜன், ஞானவேல்ராஜா, ஹெச். முரளி, பெப்சி சிவா, தனஞ்செயன், சஷிகாந்த், சுரேஷ் காமாட்சி, மனோபாலா உட்பட 30-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவர்கள் படத்தை எடுத்து முடித்தாலும் அதை வெளியிட யாரும் முன் வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அந்தப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.

இப்பிரச்னைகள் பெரிய நடிகர்கள்- இயக்குனர்கள் படங்களுக்கு இல்லை. இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை வரவேற்க வேண்டும்.

மேலும் வாசிக்க: ஜோதிகாவை விடாமல் துரத்தும் பாஜகவினர்.. மன்னிப்பு கோரும் காயத்ரி ரகுராம்

இந்த லாக் டவுன் சூழ்நிலையில் இந்தி, தெலுங்கு உட்பட பிற மொழி திரைப்படங்களை அங்குள்ள தயாரிப்பாளர்கள் OTT மூலம் விற்று, தங்கள் முதலீட்டை எடுத்துவிட முயற்சி செய்து வருகிறார்கள். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவை சரியான முறையில் வெளியாகவும் முடியும்.

இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள அனைவரும் வரவேற்க வேண்டும். முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்.

லாக் டவுன் முடிந்ததும் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான வரைமுறைகளை வகுத்து, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

முன்னதாக, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பேசியுள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம், ‘நாங்கள் வேண்டாம் என சொன்னால் அவர்கள் கேட்கவில்லை. இதை மீறி அவர்கள் OTTயில் ரிலீஸ் செய்தால், இனி அந்த நிறுவனம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் எடுக்கும் படங்கள் அனைத்தையும் OTTயிலேயே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள், எங்கள் தியேட்டர்களுக்கு உங்கள் படங்கள் வேண்டாம் என கூறிவிட்டோம்’ என்று தெரிவித்தார்.

இதனால் சூர்யாவிற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில், இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளது என சினிமா துறையினர் கூறிவந்தனர். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் இந்த அறிக்கை சூர்யாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது.