ஒடிசாவிஒடிசாவின் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணை உதவி டார்பிடோ சிஸ்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ), உள்நாட்டிலேயே ஏவுகணைகளை தயாரிப்பதுடன், அவற்றை தொடர்ந்து மேம்படுத்தி சோதனை செய்துவருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன் (11.12.2021), டிஆர்டிஓ மற்றும் இந்திய விமானப்படை, ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடிய ‘சந்த்’ எனப்படும் தொலைவில் இருந்து தாக்கும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை பொக்ரான் எல்லையில் வெற்றிகரமாக சோதனை செய்தன.

இந்நிலையில், நீர்மூழ்கி குண்டான டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று (13.12.2021) சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது, ஏவுகணையின் முழு வீச்சு திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்பிடோவின் வழக்கமான வரம்பிற்கு அப்பால் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை உதவும்.

டிஆர்டிஓ-வின் ஆய்வகங்கள் இந்த மேம்பட்ட ஏவுகணை அமைப்புக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன. இந்திய கடற்படையினர் பயன்படுத்தும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.