கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் மன ரீதியிலும், நரம்பியல் ரீதியிலும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னையை சேர்ந்த தன்னார்வலர் சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையாகி உள்ளது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கோவிஷீல்டுயை தயாரித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு தயாரிப்பதற்கான உரிமத்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. கடந்த ஆகஸ்டில் தொடங்கி கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான சோதனைகள் இந்தியாவில் 17 இடங்களில் நடந்து வருகின்றன.

இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு 3 ஆம் கட்டமாக பரிசோதனையில் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. இது குறித்து, தடுப்பூசி சோதனைகளுக்கான கட்டுப்பாட்டாளர் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் இந்த விவகாரம் குறித்த கேள்விகளுக்கும் அது பதிலளிக்கவில்லை.

ஆனால் கோவிஷீல்டு பரிசோதனை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. சென்னையில் ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி செலுத்தப்பட்டது. அதில் 40 வயதான தொழில்துறை ஆலோசகர் ஒருவர் கலந்து கொண்டு மருந்தை செலுத்திக் கொண்டார்.

ஆனால் அவருக்கு கோவிஷீல்டு மருந்து செலுத்திய பத்து நாட்களுக்குப் பிறகு, கடுமையான தலைவலி, வாந்தியெடுத்தல் தொடர்ந்து நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட நரம்பியல் ரீதியிலும் மனரீதியிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளது என அவரது மனைவி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அக்டோபர் 11 முதல் அக்டோபர் 26 வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்பும் அவர் முழுமையாக குணமாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவரது புகாரை அடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், அந்த தன்னர்வலருக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தியால் தான் பிரச்சினை எழுந்ததா இல்லை வேறு ஏதாவது காரணமா என சீரம் நிறுவனத்தின் நெறிமுறைகள் குழுவிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே தன்னார்வலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மத்திய மருந்து நிலைகாட்டும் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் அஸ்ட்ராஜெனிக்கா நிறுவனத்தின் பேராசிரியர் ஆன்ட்ரூ போலார்டு, ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கும் ஆகியவற்றிற்கு கடந்த 21 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டதால் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். மேலும் இந்த கோவிஷீல்டு மருந்தின் சோதனை, உற்பத்தி, மருந்து விநியோகம் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக இங்கிலாந்தில் தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டபோது, இங்கிலாந்தில் சுயாதீன பாதுகாப்பு கண்காணிப்புக் குழு அனுமதி வழங்கும் வரை ​​அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவர்கள் சோதனைகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

90% கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி ரெடி; ஆய்வில் வெற்றி