செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபிறகு சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்கவிருக்கிறது. தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திலும் சிம்பு நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதய சூழலுக்கு ஏற்ப அந்த படம் உருவாகயுள்ளதாகவும், இதில் சிம்பு மருத்துவராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது, மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடிக்கும் ‘பகலவன்’ என்ற படத்தை சீமான் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் சீமான் அளித்த பேட்டியில், அந்த படம் ஒருசில காரணங்களால் டிராப் ஆகிவிட்டதாகவும், ஆனால் அதற்கு பதிலாக சிம்பு நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் சீமான். இவர் கட்சி ஆரம்பித்து கடந்த சில வருடங்களாக படங்களை இயக்கவில்லை. இருப்பினும் ஒருசில படங்களில் அவர் நடித்து வருகிறார். சீமான் நடித்த ‘தவம்‘ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.