சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட இறைச்சிகளை விருப்ப உணவாக உட்கொண்டுள்ளனர் என ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழைய தொன்மையான நாகரிகம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழி அறிஞர், தொல்லியல் துறையினர், வரலாற்று பேராசிரியர்கள் என பலரும் சிந்து சமவெளி பற்றிய தங்களின் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தெற்காசிய தொல்லியல் துறையில் சிந்து சமவெளி மக்களின் உணவு பழக்கம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற அக்ஷிதா சூரியநாராயணன் தலைமையிலான ஆய்வுக் குழு மேற்கொண்டு வருகிறது.

தற்போது இக்குழு, சிந்து சமவெளி கால மக்கள் வாழ்ந்ததாக கூறப்படும், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் சுமார் 41600 வருடங்களுக்கு முந்தைய மண் பாண்டங்கள், விலங்குகளின் எலும்புகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

அந்த ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட 172 மண்பாண்ட பொருட்களை சோதனை செய்ததில், வெள்ளாடு, செம்மறியாடு, மாடு மற்றும் பன்றி ஆகியவற்றின் இறைச்சிகளின் எச்சங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

 

இந்த ஆய்வின் முடிவுகள் தொல்பொருள் அறிவியல் இதழில் (Journal of Archaeological Science) வெளியாகியுள்ளது. ஆய்வின் முடிவில், கிடைத்துள்ள எலும்புகளில் 50% முதல் 60% எழும்புகள் மாடுகளுடையது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள், அதிகளவில் மாட்டிறைச்சியை உணவுக்கு எடுத்திருக்க வேண்டும். அவர்களின் விருப்ப உணவாக மாட்டிறைச்சியே இருந்திருக்கும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக, சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதற்கு கூடுதல் ஆதாரம் கிடைத்து உள்ளது என்று பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளார். திராவிட மொழியை சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்தியது உறுதி என மேற்கு வங்க மொழி அறிஞர் முகோபாத்தியாய் ஆய்வில் நிரூபணம் ஆனதை சுட்டிக் காட்டி, அருணன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.