புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய மரியாதை செலுத்தி உடலை அடக்கம் செய்தன.
 
இந்நிலையில், இந்தத் தாக்குதலில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், திரிகைபேட்டா கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற சிஆர்பிஎப் வீரரும் மரணமடைந்தார்.
 
அவரின் உடல் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, நேற்று முன்தினம் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர் கேஜே அல்போன்ஸ் கண்ணன்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இந்த இறுதிச்சடங்கின் போது, வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் வசந்தகுமாரின் உடலுக்கு முன் நின்றுகொண்டு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். செல்பி புகைப்படம் போல இந்த புகைப்படம் அமைந்ததால், கேஜே அல்போன்ஸ் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
 
இந்த நிலையில், செல்பி எடுத்ததாக வெளியான புகைப்படம் பற்றி கேஜே அல்போன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். கேஜே அல்போன்ஸ் கூறுகையில், “பாதுகாப்பு படை வீரர் வசந்தகுமாரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன்.
 
அப்போது, சவப்பெட்டி அருகே நான் நிற்கும் போது என்னை சிலர் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படத்தை எனது ஊடக செயலர் பேஸ்புக்கில் வெளியிட்டார். மத்திய மந்திரியான என்னை மையப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவது இரக்கமற்றது, சட்டவிரோதமானது” என தெரிவித்தார். இந்த செயலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கேரள டிஜிபிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஆனால் சமூக தளத்தில் கை வராமல் இருக்கும் செல்பி படம் எப்படி என்று தெரியாத அளவுக்கு நாங்க என்ன முட்டாளா என பதிலடி கொடுத்து படத்தை பகிர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது