பாரதிய ஜனதா கட்சி சமுதாயத்தில் பிரிவினையைத் தூண்டுகிறது என்று குற்றம் சாட்டி அக்கட்சி பெண் எம்.பி ஒருவர் கட்சியை விட்டு விலகியுள்ளார்.
 
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக உறுப்பினர் பெண் துறவியான சாவித்ரிபாய் புலே. இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்.
 
சமீபத்தில் மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் ஹிந்துக் கடவுளான ஹனுமன் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்றும், ஆதிவாசி என்றும் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பரவலான எதிர்ப்பு எழுந்தது
 
அதற்குப் பதில் அளிக்கும் விதமாக சாவித்ரி பாய் புலே, ‘மனுதர்மவாதிகளால் (மனுதர்மத்தை பின்பற்றுபவர்கள்) அடிமையாக வர்ணிக்கப்பட்டவர் ஹனுமன். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை குரங்குகள், அரக்கர்கள் என்று மனுவாதிகள் அழைக்கின்றனர்’ என்று குற்றம் சாட்டினார்.
 
மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பாக அவர் பேசுகையில், ‘பிராமணர்களுக்கு வேண்டுமானால் அந்த கோவிலால் பலன் கிடைக்கலாம்.
 
கோவில் கட்ட அளிக்கப்படும் நிதி அவர்கள் (பிராமணர்கள்) லாபமடையவும், எங்கள் சமூகம் (தலித்) மேலும் அடிமையாக்கப்படவுமே உதவும்’ என்றார் சாவித்ரி பாய் புலேவின் பேச்சு கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி சமுதாயத்தில் பிரிவினையைத் தூண்டுகிறது என்று குற்றம் சாட்டி சாவித்ரி பாய் புலே கட்சியை விட்டு விலகியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
 
நான் இன்று முதல் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்து விலகுகிறேன். இன்றிலிருந்து பா.ஜனதாவுக்கும் எனக்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது. நான் தலித் என்பதால் என்னுடைய குரல் கட்சியில் ஒடுக்கப்பட்டது.
 
பொதுவாகவே தலித் மற்றும் அவர்களுடைய உரிமைகளுக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் நடைபெறுகிறது. அவர்களுக்கான இட ஒதுக்கீடு நிராகரிக்கப்படுகிறது. அரசியலமைப்புக்கான என்னுடைய போராட்டம் தொடரும்.
 
வரும் ஜனவரி 23-ல் லக்னௌவில் மெகா பேரணியை நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
இவரும் விலகிய நிலையில் பாஜக எம்பி எண்ணிக்கை 266 ஆக குறைந்து விட்டது.. இது பெரும்பான்மை நிருபிக்க 6 எண்ணிக்கை குறைவு ஆகும் ..
 
2014 தேர்தலில் 282 எம்பிக்களை கொண்டு ஆட்சி அமைத்த பாஜக இப்போது அதில் 16 எம்பிக்களை  இழந்து உள்ள்து குறிப்பிடதக்கது