சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ ஏற்று நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரும் காவல் துறையினர் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை சேர்ந்த சிலரால் கொடூரமான முறையில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு தாக்கப்பட்டு இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை தாமான முன் வந்து விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, சிபிஐ போலீசார் விசாரணைக்கு முன்னர் தடயங்கள் சாட்சிகள் அழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரை கைது செய்து, கொலை, தடயங்களை அழித்தல் உட்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வரின் கோரிக்கையை ஏற்று, சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: பிரண்ட்ஸ் ஆப் போலீஸாக இயங்கும் சேவாபாரதி உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை..

முன்னதாக இந்த வழக்கை துரிதமாக எடுத்து நடத்திய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் இருந்த நீதிபதி பிரகாஷ் திடீரென மாற்றப்பட்டு, நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது வழக்கமான நடைமுறைபடி மாற்றப்படுவதுதான் ஆளும் அதிமுக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இதுபோன்ற சிறப்பு வழக்குகளின்போது நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதிபதி பிரகாஷ் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.